Skip to main content

நட்சத்திரம்!

ஏழைக் குடிசையின்
ஓலைப் பொத்தல்கள்-
வானக் குடையில்
வாரித்தெளித்த
ஓட்டைகளின் வழியாய்
ஒளிப் புள்ளிகளோ?!!

நீதி தவறிய
பாண்டியன் முன்
சினத்துடன் வீசிய
சிலம்பினின்று
சிதறாமல் சிரித்த
சிறந்த முத்துக்களோ?!!

வானத்து நகரத்தில்
வானவர்கள்
கடைத்தெருவில் ஒளிரும்
கணக்கில்லா
மின் விளக்குகளோ?!!

இரவெனும் அழகியின்
கிரீடத்தில் பதித்த
மின்னும்
வைரக் கற்களோ?!

மனிதனின் பலவித
ஆசைகளை
ஆண்டுகள் பல
அசையாது நின்று
கண்டுச்
சிரிக்கும்
அறிஞர்களோ?!

உலகமெனும்
நாடகமேடையில்
நடைபெறும்
நாடகத்தை
கண் சிமிட்டி
களிக்கும்
வானவெளி ரசிகர்களோ?!!

கவிஞர்கள் வியந்து
பாட்டு எழுதவே
பரந்த கறுப்புப்
பட்டாடையில்
இயற்கை வரைந்த
எழிற்க் கோலமோ?!!


Comments